ஹிமாசல பிரதேச மாநிலத்தில் சலுன்ஜ் மோர் பகுதி அருகே பயணிகள் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஹிமாச்சல் மாநிலத்தில் சம்பா மாவட்டத்தில் திஸ்ஸா-பைராகர் வழித்தடத்தில் உள்ள சலுன்ஜ் மோர் பகுதி அருகே 18 பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் ஒன்று சாலையிலிருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இன்று சனிக்கிழமை காலை 7.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 7 பேர் உயிரிழந்தனர் எனவும் 11 பேர் காயமடைந்தனர் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலே உள்ள சாலையில் இருந்து கீழிறங்கும் சாலைக்கு பஸ் திரும்பும்போது கட்டுப்பாடு இழந்து கவிழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஸ் சென்ற பகுதி அதிக வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 6 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
