இலங்கையில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற, ஆளுகை, நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தீர்மானித்துள்ளது.
2009ஆம் ஆண்டின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டம், எண் 35ஐ ரத்து செய்வதற்காக இந்த சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அக்காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, ஆயுதப் படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டம் 2009இல் இயற்றப்பட்டது.
இருப்பினும், நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முப்படைகளின் ஒருங்கிணைப்பிற்காக ஒரு தனியான பணியகத்தையோ அல்லது பதவியையோ பராமரிக்க இனி தேவை இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் தற்போதைய மறுசீரமைப்புச் செயல்பாட்டின் கீழ், இந்த ஒருங்கிணைப்பு பாதுகாப்பு அமைச்சின் மூலம் செய்யப்படுகிறது.
மேலும், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த பணியகத்தின் பணிகளைப் பாதுகாப்பு அமைச்சுக்னு மாற்றுவது அரசாங்கத்தின் நிதிச் சுமையைக் குறைக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, துறைசார் மேற்பார்வைக் குழு இந்த சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தச் சட்டமூலம், செப்ரெம்பர் 9 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பிற்காக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் நடைபெற்ற இந்தக் குழுவின் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் அழைக்கப்பட்டிருந்தது.
