தொழில் செய்யும் மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்த வாழ்த்துச் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தகூடிய சமூக சக்தியாக தொழில் செய்யும் மக்களே உள்ளனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழில் புரியும் மக்களின் பெருமையை உலகிற்கு காண்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு தீர்மானமிகு சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களுக்குள் அகப்படாது நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளது.
2048 ஆம் ஆண்டாகும் போது அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்காக, புதிய மறுசீரமைக்கப்பட்ட பாதையில் ஒன்றிணையுமாறு தொழில் புரியும் மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
எவ்வித ஒப்பந்தங்கள் ஊடாகவும் தொழில் புரியும் மக்களின் உரிமைகள் மீறப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிக்கின்றார்.
சேவை மற்றும் ஊழியர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு அமைய முன்னோக்கி செல்லவுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
இதேவேளை, புன்னகைக்கு பதிலாக கண்ணீரையும் ஜனநாயகத்திற்கு பதிலாக பயங்கரவாதத்தையும் ஒடுக்கு முறைகளையும் மக்கள் மீது அரசாங்கம் சுமத்தியுள்ள நிலையில் இம்முறை தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார்.
நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கை அதள பாதாளத்திற்கு தள்ளப்படுவதுடன் பெரும்பாலான மக்களுக்கு தொழில் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படைவாதம், இனவாதம், பயங்கரவாதமற்ற சிறப்பான நாட்டை கட்டியெழுப்பக்கூடிய சவாலை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரேயொரு சக்தியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் வலுவான முகாமை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.