சுபீட்சமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு புத்த பகவானின் போதனைகளின் படி ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் அணி திரளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சவாலான காலப்பகுதியில் புத்தரின் காலத்திற்கு அப்பாற்பட்ட தூரநோக்கான விடயங்கள், ஆறுதல் அளிக்கும் காரணிகளாக காணப்படுவதாக ஜனாதிபதி தனது வெசாக் போயா தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்து சாதாரண வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான சவாலை வெற்றிகொள்ள புத்த பகவானின் போதனைக்கு அமைய ஒற்றுமையுடனும் நம்பிக்கையுடனும் ஒன்றிணைவது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பௌத்த மதம் காட்டும் முறையான வழிமுறைகள் இன்று நாம் எதிர்நோக்கும் நெருக்கடி நிலையை தணிப்பதற்கு பெரிதும் உதவும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது வெசாக் போயா தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உண்மையான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, பற்றின்மை ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, புத்தரின் வாழ்க்கை எப்பொழுதும் பௌதிக வாழ்க்கையை மேம்படுத்தி நடைமுறை செயற்பாடுகளின் ஒழுங்கை வௌிப்படுத்துவதாக அமைந்துள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது வெசாக் போயா தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
புத்த பெருமானின் தர்மம் உலக உயிரினங்கள் அனைத்திற்கும் அடையாளமாகிய தனித்துவம் மிக்க கருணை நிரம்பிய தர்மமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப் பெரிய தர்மத்தில் தஞ்சம் புகுந்த உன்னத குடிமக்களாக, உலக உயிரினங்கள் மீது கருணை, பாசம் மற்றும் அன்புடன் மகத்தான வெசாக் நாட்களை கொண்டாடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.