Colombo (News 1st) ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கு தொழில்புரிந்த இலங்கையர்களை சட்ட நடவடிக்கைகளின் பின்னர் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 220 இலங்கை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்படுவதால் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் நலப் பிரிவு, அந்நாட்டு தொழில் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த தொழிலாளர்களுக்கு தாயகம் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டினை வழங்க அந்நாட்டு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.