Colombo (News 1st) பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு புதன்கிழமை (07) குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
86 வயதாகும் பாப்பரசருக்கு ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவரது பெருங்குடல் சுருங்கியதால் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, அந்த அறுவை சிகிச்சையின்போது 33 செ.மீ அளவில் பெருங்குடல் நீக்கப்பட்டது. அப்போது அவா் 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தாா்.
தற்போது மீண்டும் குடல் பகுதி அடிக்கடி சுருங்கி வலி ஏற்படுவதால், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக வாட்டிகன் தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவா் பல நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தொற்று காரணமாக கடந்த மாா்ச் மாத இறுதியில் 3 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், சிகிச்சை முடிந்து திரும்பியபோது ‘நான் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்று நகைச்சுவையாகக் கூறியது நினைவுகூரத்தக்கது.