Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் திருத்தப் பணிகளுக்காக பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த குமுதினி படகு சேவை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று(20) பிற்பகல் நடைபெற்றது.
யாழ்.குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி செயலிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் திருத்தப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குமுதினி படகின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படகை கடலுக்குள் இறக்குவதற்காக நடவடிக்கை நேற்று(20) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு பொங்கல் பொங்கி வழிபாடு இடம்பெற்றதுடன் சம்பிரதாயபூர்வமாக குமுதினி படகு கடலுக்குள் இறக்கி விடப்பட்டது.
குமுதினி படகு 1968 ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.