Colombo (News 1st) வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அதாவது, மிகை அழுத்ததின் காரணமாக நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இம்முறையிலான வெடிப்பை நிபுணர்கள் ‘Catastrophic Implosion’ என்று விபரிக்கின்றனர். இதில் Catastrophic என்பதற்கு பேரழிவு என்றும் Implosion என்பதற்கு பெரு வெடிப்பு என்றும் பொருள்.
Explosion என்பது மிகை அழுத்தத்தினால் ஒரு பொருள் வெளிப்புறமாக வெடித்துச் சிதறுவது. இதற்கு எதிர்மறையான செயல்தான் Implosion. அதாவது அழுத்ததினால் ஒரு பொருள் உட்புறமாக வெடித்துச் சிதறுவது .
நீர்மூழ்கிக் கப்பலின் உள்ளே குறிப்பிட்ட அளவு அழுத்தம் இருக்கிறது. அப்போது வெளியில் உள்ள நீரின் அழுத்தம் இன்னும் கூடுதலாக இருக்கும்போது அதனை தாங்க முடியாமல் நீர்மூழ்கிக் கப்பல் உட்புறமாக நசுங்கி வெடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
உதாரணத்திற்கு ஒரு சில்வர் கேனில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் மிக சூடான நீரை உள்ளே ஊற்றி அதனை மூடிவிடுங்கள். சில நொடிகளில் அந்த பாட்டில்கள் அழுத்தத்தினால் நசுங்கி.. நெளிந்து காணப்படுவதை நீங்கள் காணலாம். இதன் உச்ச நிலைதான் நீர்மூழ்கிக் கப்பலில் நடத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுவும் இந்த வெடிப்பு வெகு விரைவாக நடந்திருக்கிறது. அதாவது 30 நொடிகளில் மிகை அழுத்ததினால் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆழ்கடலின் சராசரி அழுத்தம் என்பது சுமார் 400 வளிமண்டல அழுத்தங்களுக்கு சமம் . இதன் காரணமாகவே இத்தகைய பேரழிவான வெடிப்பு நடந்திருக்கிறது.
மேலும் அட்லாண்டிக் கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலின் உதிரிப்பாகங்கள் அடிப்படையிலும் நீர்மூழ்கிக் கப்பல் Catastrophic implosion முறையில்தான் வெடித்துள்ளது என நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
இங்கிலாந்தை சேர்ந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1912 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கான தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் டைட்டானிக்கின் உதிரிப்பாகங்கள் கனடா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
இந்த ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களைப் பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவை சேர்ந்த OceanGate என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 21 அடி நீளத்தில் டைட்டன் என்ற சிறப்பு நீர்மூழ்கிக் கப்பல் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் பகுதியில் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை OceanGate Titan நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஹமிஷ் ஹார்டிங் (58) பிரிட்டனைச் சேர்ந்த கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் மிக்கவர், ஷாசாதா தாவூத் (48) பாகிஸ்தானின் பெரும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரது மகன் 19 வயதான சுலைமான் தாவூத், பால் ஹென்றி – பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் பைலட், ஸ்டாக்டன் ரஷ், (61) – டைட்டானிக் பயணங்களை இயக்கும் நிறுவனமான OceanGate-இன் தலைமை நிர்வாகி ஆகியோர் பயணித்துள்ளனர்.
இவர்களின் பயணம் எதிர்பாத்ததுபோல் அமையவில்லை. சரியாக 1 மணி நேரம் 45 ஆவது நிமிடத்தில் நீர்மூழ்கிக் கப்பல் தனது சிக்னலை அட்லாண்டிக் கடலில் இழந்தது. இதனைத் தொடர்ந்து நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா – கனடாவின் கடற்படை ஈடுபட்டது. இந்த நிலையில், நீர்மூழ்கிக் கப்பல் விபத்திற்குள்ளாகி 5 பேரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.