Colombo (News 1st) மினுவாங்கொடை – ஹொரம்பெல்ல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உடனான பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக நேற்றிரவு(19) பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வீட்டிற்குள் மறைந்திருந்து பாதுகாப்பு தரப்பினர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
36 வயதான குறித்த சந்தேகநபர், கடந்த காலங்களில் கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.