Colombo (News 1st) பெருந்தோட்ட மக்கள் வீடுகளை அமைத்து வாழவும் அவர்களை சிறுதோட்ட உரிமையாளராக்கும் கொள்கைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒரு கட்சியாக இணக்கப்பாடு கொண்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா முதல் அவிசாவளை வரை நாடெங்கும் பரந்து வாழும் பெருந்தோட்ட மக்கள் வீடுகளை அமைத்து வாழவும் பயிர்ச்செய்கை வாழ்வாதாரத்திற்கு காணி வழங்கி, அவர்களை சிறுதோட்ட உரிமையாளராக்கும் கொள்கைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உடன்பாடு கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வாழும் மக்களுக்கு தொடர் மனைகளை கட்டி சொந்த வீடுகள் வழங்கவும் சஜித் பிரேமதாச தம்முடன் ஒரு கட்சியாக, தேசிய கூட்டணியாக உடன்பாடு கண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் விடிவுக்கு நிரந்தர தீர்வுகளான காணி உரிமையும் வீட்டு உரிமையும் கல்வி உரிமையும் உறுதிப்படுத்தப்படுவதாகும் கல்வி உரிமைக்கு இந்திய அரசு உதவும் என தாம் நம்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.