இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையின் போது கச்சத்தீவை மீட்டு இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்துமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பூகோள ரீதியான நெருக்கம், வரலாற்று, பொருளாதார மற்றும் கலாசாரத் தொடர்புகள் காரணமாக நீண்ட காலமாக பல பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதாகவும் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு அவர் கோரியுள்ளார்.