Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபை சாரதிகளினால் இழைக்கப்படும் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளைத் தடுத்து, பாதுகாப்பான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் கீழ் சாரதிகளுக்கு தகுதிப் பரிசோதனை புத்தகமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் விபத்திற்குள்ளாவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை பிரிவின் முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 218 பஸ்கள் விபத்திற்குள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு பதிவாகிய 19 கோர விபத்துகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துகள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை வருடமொன்றுக்கு 30 தொடக்கம் 40 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை செலுத்தவேண்டி ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை பிரிவின் முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார்.