Colombo (News 1st) நிதிக்குற்ற வழக்கு விசாரணைகளுக்காக விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
2021/22 ஆம் ஆண்டிற்கான நிதி மோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி குறித்த தேசிய இடர் மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
முறைசாரா வகையில் பணம் அனுப்புதல், உண்டியல் முறைமை என்பன நாட்டில் பண மோசடி செய்யும் அபாயகரமான முறையாக மாறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ஆபத்துள்ள பண மோசடி முறைகளில் ரியல் எஸ்டேட் முகவர்கள், வங்கித்துறை மற்றும் நிதி நிறுவனங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பண மோசடி என்பது நிதி சொத்துகளை சட்டவிரோதமாகப் பெறுதல் மற்றும் சம்பாதிக்கப்பட்ட முறைமை என்பவற்றை வெளியிடாமல் பயன்படுத்துவதைக் குறிக்கின்றது.
அதற்கமைய, இலங்கை மத்திய வங்கி தனது அண்மைய அறிக்கையில் பண மோசடி தடுப்பு தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.