Colombo (News 1st) ஹங்வெல்லயில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இன்று அதிகாலை இடம்பெற்ற மோதலில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கடந்த 25 ஆம் திகதி தலங்கம ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் வியாபாரி ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே இவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக அதிகாரிகள் குழுவொன்று பாதுக்க – வக்க பகுதிக்கு இன்று அதிகாலை சென்றதாகவும்,
இதன்போது சந்தேகநபர் T81 தன்னியக்க துப்பாக்கி மூலம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலின் போது, அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ கமாண்டோ ரெஜிமென்ட்டிலிருந்து தப்பிச்சென்ற, தலங்கம பகுதியை சேர்ந்த 24 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.