Colombo (News 1st) பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டிருப்பது நிரூபணமாகியுள்ளது.
ஷாப்டரின் மரணம் தொடர்பில் கண்டறிவதற்கு நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய நிபுணர்கள் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்தரா ஜயசூரிய இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கழுத்து மற்றும் முகத்தில் ஏற்பட்ட அழுத்தமே மரணத்திற்கான காரணம் என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதனை கொலையாகக் கருதி விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறியுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொரளை பொது மயானத்தில் அவரது காரில் கழுத்து இறுகக் கட்டப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி தினேஸ் ஷாப்டர் கண்டுபிடிக்கப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் இரவு அவர் உயிரிழந்தார்.