Colombo (News 1st) இலங்கையின் நிதித்துறையை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் டொலர் நிதியை வழங்க உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வலுவான நிதி பாதுகாப்பு வலையமைப்பின் அவசியத்தை தற்போதைய பொருளாதார நெருக்கடியானது எடுத்துக்காட்டுவதாக, மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் Faris Haddad-Servos தெரிவித்துள்ளார்.
இதற்காக பொருளாதாரம், வர்த்தகம், தனிநபர்கள், சிறு வணிகங்கள் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு நிலையான மற்றும் நம்பகமான வங்கிக் கட்டமைப்பு மிகவும் அவசியமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலையான காப்புறுதித் திட்டத்தை வலுப்படுத்துவதன் ஊடாக பின்தங்கிய கிராமப்புறங்களில் வசிப்போர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறியளவான வைப்பாளர்களின் சேமிப்பை பாதுகாக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டம் இலங்கையின் நிதிக்கட்டமைப்பில் நம்பிக்கையை நிலைநிறுத்தும் எனவும், நாட்டை மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றுமெனவும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் Faris Haddad-Servos இதன்போது தெரிவித்துள்ளார்.