Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தந்துள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான Shen Yiqin பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று(20) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு சீனா வழங்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர் தினேஷ் குணவர்தன, கடன் நெருக்கடியின் பின்னர் பொருளாதாரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்காக இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
பொருளாதார சிக்கல்களுக்கு நீண்ட கால தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்பை இலங்கை வரவேற்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சீனா நம்பிக்கை வழங்கியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, சீனா இலங்கையை மிக நெருங்கிய நண்பராகக் கருதுவதாக சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான Shen Yiqin தெரிவித்துள்ளார்.
நெருக்கடிகளைத் தீர்ப்பது தொடர்பில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றத்தைக் கண்டு சீனா மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட அவர், பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகளுக்கு சீனா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குமெனவும் உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் சுந்திரம் மற்றும் சுயாதீனத்தன்மை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய விடயங்களுக்காக சீனா எப்போதும் முன்னிற்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.