யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட வன்முறை கும்பல் பயணித்த வாகனம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, நேற்று முன்தினம் திங்கட்கிழமை இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் பின்னர் அங்கிருந்து ஹயஸ் ரக வாகனத்தில் காங்கேசன்துறை – யாழ்ப்பாண வீதியில் தப்பியோடி மல்லாகம் பகுதியில் வாகனத்தை விட்டு இறங்கி வன்முறையில் ஈடுபட்டு , வீதியில் சென்றவர்களை வாள்களை காட்டி அச்சுறுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
அது தொடர்பில் மல்லாகம் சந்தியில் கடமையில் நின்ற பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது , வன்முறை கும்பல் வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளனர்.
தப்பியோடிய வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் வன்முறை கும்பல் தப்பியோடி இருந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , யாழில் இயங்கும் வன்முறை கும்பலை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு, நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள சந்தேகநபர் ஒருவரை தெல்லிப்பளை பொலிஸார் நேற்றைய தினம் (05) பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து, வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் அவரை விடுவித்து இருந்தனர்.
அதேவேளை , தெல்லிப்பளையில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் , வன்முறையில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் அடையாளம் கண்டு இருந்தனர்.
அத்துடன் , தெல்லிப்பளை முதல் சுன்னாகம் வரையிலான வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு (CCTV) கமரா பதிவுகளை ஆய்வு செய்ததன் மூலம் வன்முறை கும்பல் பயணித்த வாகனத்தை அடையாளம் கண்டு இருந்தனர்.
அதன் அடிப்படையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் , வாகனத்துடன் பதுங்கி இருந்தப்பதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனத்தை மீட்டதுடன், அங்கு பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை குறித்த வன்முறை சம்பவமானது, யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் இரண்டு வன்முறை கும்பலுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியே என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.