Colombo (News 1st) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனடியாக மீட்பதற்கு தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய மத்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்றைய தினம் எழுதியுள்ள கடிதத்திலேயே முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மற்றும் மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்களும் கடந்த 09 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் மற்றொரு மீன்பிடிப் படகு இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரின், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றமையானது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்பதற்கு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்திய மத்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.