Colombo (News 1st) இந்த ஆண்டுக்கான உயர் தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக வெளியானமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறையிலுள்ள பாடசாலையொன்றின் விவசாய விஞ்ஞான ஆசிரியரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு முன்னதாக விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான கேள்விகள் மற்றுமொரு தாளில் கையால் எழுதப்பட்டு சமூக ஊடகங்களில் வௌியானமை தெரியவந்தது.
இதனை தொடர்ந்தே குறித்த வினாத்தாள், மும்மொழிகளிலும் கல்வி அமைச்சினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இரத்து செய்யப்பட்டுள்ள விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி வினாக்களுக்கான மீள்பரீட்சை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மீள் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.