Colombo (News 1st) கடந்த காலங்களில் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட கைதிகளுக்கிடையில் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் சிலர் உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அவர்கள் அவ்வப்போது வன்முறைகளை தோற்றுவிக்கின்றமை அம்பலமாகியுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கூறினார்.
இந்த விடயம் தெரியவந்ததுள்ள நிலையில், கைதிகளுக்கிடையில் உள்ள போதைப்பொருள் கடத்தற்காரர்களை அடையாளங்கண்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுக்திய சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையானர்கள் என கூறப்படும் சுமார் 300 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 22 முதல் 36 வயதுக்கிடைப்பட்ட சுமார் 100 பேர் அடங்குவதுடன், இவர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பல சந்தர்ப்பங்களில் மோதல்களை உருவாக்கியுள்ளதாகவும் இதனால் புனர்வாழ்வு நிலையத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மேலும் போதைக்கு அடிமையான 36 வயதிற்கு மேற்பட்ட 200 பேர் கைது செய்யப்பட்டு, சேனபுர புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலில் தப்பிச்சென்ற 13 பேரைத் தேடி தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 34 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு நிலையத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் பின்னர் 47 கைதிகள் தப்பிச்சென்றனர்.
இது தொடர்பில் நீதிமன்றம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
இது தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த குழுவின் பரிந்துரைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.