சுவிட்சர்லாந்தின் மேற்கில் ரயில் ஒன்றில் கோடரியுடன் மர்ம நபர் பயணிகளை சிறைபிடித்த நிலையில், பொலிசார் முன்னெடுத்த துரித நடவடிக்கையால் சிறை பிடிக்கப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை இரவு Vaud மாகாணத்தில் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் கோடரி மற்றும் கத்தியுடன் பயணிகளை சிறை பிடித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
பொலிசார் தெரிவிக்கையில், வேறு வழியின்றி, துப்பாக்கியால் சுட்டு, பயணிகளை அந்த நபரிடம் இருந்து மீட்கும் நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். தற்போதைய நிலையில், அந்த நபரின் நோக்கம் என்ன என்பது தெரியவரவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். கோடரியுடன் பொலிசாரை எதிர்கொள்ள முயன்ற நிலையிலேயே, அதிகாரிகள் துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
14 பயணிகளும் ஒரு நடத்துனரும் அந்த நபரால் சிறை பிடிக்கப்பட்டதாகவும், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சுமார் நான்கு மணி நேரம் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர பொலிஸ் தரப்பு போராடியுள்ளது.
அந்த நபர் ஈரானிய Farsi மொழி பேசியதாகவும், இதனால் மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் அந்த நபருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
நான்கு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தின் இறுதியில், ரயிலுக்குள் அதிரடியாக நுழைந்து, பயணிகளை காப்பாற்ற அதிகாரிகள் தரப்பு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் இதுபோன்ற சம்பவங்கள் அரிதாகவே நடந்தேறும். கடந்த 2022 ஜனவரியில், விலைமதிப்பற்ற உலோகங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டகங்களை அணுகும் முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒரு தம்பதி மற்றும் ஒரு நிறுவனத்தின் இரண்டு ஊழியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.
ஆனால் அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடியவே, சம்பவயிடத்தைவிட்டு மாயமாகினர். 2021 நவம்பரில் பிரபல கைக்கடிகார நிறுவன இயக்குனர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை சிறை பிடித்த குழு ஒன்று, அவரது குடியிருப்பில் இருந்து தங்க கட்டிகளை கொள்ளையிட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு தப்பியதாக விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.