Colombo (News 1st) கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களுக்கு நஞ்சு கலந்த பானத்தை வழங்கி கொலை செய்ய முயற்சித்த சம்பவத்திற்கு நிதியுதவி வழங்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 24 ஆம் திகதி ஒருவரை துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கும், அவர்களை பார்வையிடச் சென்ற ஒருவரால் நஞ்சு கலந்த பானம் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 07 ஆம் திகதி இந்த சம்பவம் பதிவானது.
இந்த சம்பவத்திற்கு நிதியுதவி வழங்கிய 25 மற்றும் 32 வயதான இருவர் வத்தளை மற்றும் கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதிகளில் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஒருதொகை ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.