Colombo (News 1st) அமெரிக்காவின் ஒடிசியஸ் (Odysseus) விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவினை வெற்றிகரமாக தொட்டுள்ளது என்பதுடன், நிலவின் தென் துருவத்தில் தனியார் நிறுவன விண்கலம் ஒன்று தரையிறங்கியுள்ளது.
அமெரிக்காவின் ஹூஸ்டனை தலைமையிடமாகக் கொண்ட Intuitive Machines தனியார் நிறுவனம் கடந்த 15 ஆம் திகதி நவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் நிலவை சென்றடையும் வகையிலான விண்கலத்தை SpaceX Falcon 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது.
அமெரிக்காவின் Apollo 1972 ஆம் ஆண்டு தரையிறங்கிய பின்னர் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றியடைந்துள்ளது.
ஒடிசியஸ் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் உள்ள Malapert A என்ற இடத்தில் தரையிறங்கியுள்ளது . அந்த இடம் ஒப்பீட்டளவில் தட்டையானது, அதிகமான மலைகள், பாறைகளால் சூழப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தரையிறங்கும் நேரத்திற்கு முன்பாக விண்கலம் சமிக்ஞை கட்டமைப்பில் சிக்கல்களை சந்தித்தது. இதனால், பதற்றம் உருவானது. எனினும், Intuitive Machines சற்று நேரத்தில் விண்கலம் செயலிழக்கவில்லை, சமிக்ஞை வந்துகொண்டிருக்கிறது என தெரிவித்தது.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தை அடைந்ததற்கு பின்னர் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
மற்றொரு நிறுவனமான Astrobotic Technology-இன் Moon Rover ஜனவரி 8 ஆம் திகதி நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே உந்துவிசை கலனில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.