Colombo (News 1st) தேர்தல் முறைமை மறுசீரமைப்பிற்காக ஒவ்வொரு துறை சார்ந்தும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 3 உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தேர்தல் முறைமைகள் மற்றும் அது தொடர்பான அரசியலமைப்பிற்கு உட்பட்ட சட்டக்கட்டமைப்பு தொடர்பான யோசனைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் மாதவ தேவசுரேந்ர தெரிவித்துள்ளார்.
ஊடக மதிப்பீடுகள், பெண்கள் பிரதிநிதித்துவம் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து மற்றுமொரு உப குழு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது.
மற்றைய உப குழுவின் ஊடாக தேர்தலொன்று அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பொறுப்புகள், நடத்தை விதிமுறைகளை தயாரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பிலான பரிந்துரைகள் முன்வைக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் மாதவ தேவசுரேந்ர கூறினார்.
இந்த பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் புதிய தேர்தல் முறைமை தொடர்பிலான முதல்கட்ட அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தியா, சிங்கப்பூர், கனடா, பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, எஸ்டோனியா ஆகிய ஜனநாயக தேர்தல் முறைமை காணப்படும் நாடுகளின் தேர்தல் முறைமைகளை ஆராயும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த தேர்தல் முறைகளின் ஊடாக இலங்கையின் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு பெற்றுக்கொள்ளக்கூடிய முன்மாதிரி தொடர்பில் தௌிவை பெற்றுக்கொள்வது இதன் நோக்கமாகும் என செயலாளர் கூறியுள்ளார்.