Sangathy
IndiaNews

தவெகவின் முதல் அணி… யார் தலைமையில் தெரியுமா? : விஜய் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அணிக்கு மகளிர் தலைமையில் நிர்வாகிகளை நியமித்து அதன் தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்க்கு கடந்த பல ஆண்டுகளாகவே அரசியல் ஆசை இருந்து வந்தது. இதற்காகவே விஜய் மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து 10 வருடங்களுக்கு மேலாக நற்பணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்குவதாக யாரும் எதிர்பாரா விதமாக விஜய் அதிரடியாக அறிவித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்த அவர், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றும் மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய்யும், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்தும் உள்ளனர். ஆனால், பிற அணிகளின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தனர். கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்கிற இலக்கு அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் முதலாக ஒரு அணி, அதாவது உறுப்பினர் சேர்க்கை அணி தொடங்கப்பட்டு, அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை தற்போது வலுப்படுத்தி வருகிறோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கை என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியைச் சேர்ந்தவர்கள் கழகத் தோழர்களோடு இணைந்து மக்களுக்கு உதவி புரிவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணி மாநில செயலாளராக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சி. விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில இணைச் செயலாளராக குறிஞ்சிபாடியைச் சேர்ந்த எஸ்.என். யாஸ்மின், மாநிலப் பொருளாளராக கோவையை சேர்ந்த வி. சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலத் துணைச் செயலாளர்களாக மதுரையைச் சேர்ந்த விஜய் அன்பன் கல்லணை, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.எல். பிரபு ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் புதிய அணி கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

 

Related posts

க.பொ.த உயர் தர, சாதாரண தர பரீட்சைகளுக்கான தரங்களை மாற்ற அரசாங்கம் திட்டம்

Lincoln

வத்தளையில் ஹோட்டல் முகாமையாளர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை

John David

Two Lankan films recognized at Rotterdam Intl Film Festival

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy