பயிர்ச்செய்கைக்கான இலவச நீருக்கு கட்டணம் வசூலிக்க அல்லது தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக சில அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வரும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதுவரையில் அவ்வாறானதொரு பிரேரணை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் விவசாய அமைச்சுக்கோ அல்லது அமைச்சரவைக்கோ முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இருந்தபோதிலும், குறிப்பிட்ட அரசியல் கட்சியின் விவசாயிகளின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர், அரசியல் இலாபங்களுக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துவதற்காக இந்த பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஹடபிம அதிகாரசபையின் ஏற்பாட்டில் ஹங்கம ஹதகல பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக 200 குடும்பங்களுக்கு கோழி குஞ்சுகள் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து அமைச்சர் இதனை அறிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கோழி குஞ்சுகள் அமைச்சரினால் பரிசாக வழங்கப்பட்டது.