டி20 பைனலில், ஒரு அணி தொடர்ந்து படுமோசமாக விளையாடி 16 ரன்களுக்கு அவுட் ஆகி உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டி20 கிரிக்கெட் என்றாலே, விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும், அரையிறுதி, இறுதிப் போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை. அவ்வளவு பரபரப்பு இருக்கும். ஆனால், இங்கு ஒரு அணி படுமோசமாக சொதப்பி உள்ளது.
ஜிம்பாப்வே நாட்டில், ஜிம்பாப்வே டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. தூர்ஹம், மிட் வெஸ்ட் ரினோஸ், மௌண்டைனரிஸ், மசோனலாந்த் ஈகல்ஸ், சௌதர்ன்ஸ் ராக்ஸ், மெடாபெலெந்த் டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன.
இதில், பிளே ஆப் சுற்றுக்கு துர்ஹம், ரினோஸ், மௌண்டைனரிஸ், ஈகல்ஸ் ஆகிய அணிகள் முன்னேறிய நிலையில், இதில் இறுதிப் போட்டிக்கு தூர்ஹம், ஈகல்ஸ் ஆகிய அணிகள் முன்னேறின.
பைனலில், முதலில் களமிறங்கிய தூர்ஹம் அணி பேட்டர்கள், மசோனலாந்த் ஈகல்ஸின் பௌலர்களை தொடர்ந்து அபாரமாக எதிர்கொண்டனர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 229/6 ரன்களை குவித்து அசத்தியது.
தூர்ஹம் அணியில், ஓபனர் ஓலிவர் ராபின்சன் 49 ரன்களை அடித்து ஆட்டமிழந்த நிலையில், ஒன்டவுன் பேட்டர் பாஸ் டி லெடி (58) அரை சதம் அடித்து அசத்தினார். இறுதிக் கட்டத்தில், ஹைடன் மஸ்டர்ஸ் (46) அதிரடி காட்டியதால்தான், தூர்ஹம் அணி 229 ரன்களை குவித்து அசத்தியது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய மசோனலாந்த் ஈகல்ஸ் அணியில், யாருமே 5 ரன்னை கூட தாண்டவில்லை. ஓபனர்கள் உட்பட மொத்தம் 5 பேட்டர்கள் டக்அவுட் ஆனார்கள். மொத்தம், 8.1 ஓவர்களிலேயே, ஈகல்ஸ் அணி, 16/10 ரன்களை மட்டும் எடுத்து, தோற்றது. ஒரு ஒயிடும் வீசப்பட்டது.
தூர்ஹம் அணியில், மொத்தம் 7 பௌலர்கள் பந்துவீசினார்கள். அவர்கள் மொத்தம், சேர்ந்தே ஒரேயொரு பவுண்டரியை தான் விட்டுக்கொடுத்தனர். ஒருவர் கூட, 5 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்கவில்லை. இதனால்தான், தூர்ஹம் அணி பைனலில் மிரட்டலாக செயல்பட்டு, கோப்பையை வெல்ல முடிந்தது.
டி20 கிரிக்கெட்டில், மிகக் குறைந்த அணி ஸ்கோர் 10 ரன்கள் தான். ஈசில் ஆப் மேன் என்ற அணி, ஸ்பெய்னுக்கு எதிராக இந்த ஸ்கோரை அடித்திருந்தது. நாக்அவுட் சுற்றில் மிகக் குறைந்த ஸ்கோராக ஈகல்ஸ் அடித்துள்ள 16 ரன்கள் இருக்கிறது.