காஸாவில் கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்கல் நடத்தியது. இதில் வடக்கு காஸா முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.
வடக்கு காஸா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம் படிப்படியாக மற்ற பகுதிகளிலும் தங்களது தாக்குதலை விரிவுப்படுத்தியது. காஸாவின் தெற்கு முனையிலுள்ள முக்கிய நகரான ரஃபாவை தவிர்த்து ஏறக்குறைய மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ரஃபா பாதுகாப்பான பகுதி என மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு வந்து தஞ்சமடைந்துள்ளனர். எனவே தனது கடைசி இலக்காக ரஃபா நகரை இஸ்ரேல் படை குறிவைத்துள்ளது. ரஃபா நகரில் உள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை திட்டமிட்டுள்ளது.
மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் இஇராணுவம் உத்தரவிடவுள்ளது. ரஃபாவில் வசிக்கும் 1.4 மில்லியன் இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்களில் பெரும்பாலானவர்களை காஸாவின் மையப் பகுதியில் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்ப திட்டமிட்டிருப்பதாக இராணுவம் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. ஹமாஸ்
அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
ரஃபா நகரில் தாக்குதல் நடத்தப்பட்டால் பொதுமக்கள் என்ன ஆவார்கள் என்று நினைத்து பார்க்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. காஸா முனைக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு ரஃபா எல்லை முக்கியமானதாக திகழ்கிறது. ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாலஸ்தீன மக்கள் உதவிப் பொருட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏற்கனவே மக்கள் பட்டினி விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.