கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஜப்பான், தைவான், தெற்கு சீனா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அதிபயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.
ஏப்ரல் மாத துவக்கத்தில் தீவு நாடான தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 7.5 ரிக்டர் அளவிலான இந்த நிலநாடுக்கத்தினால் அண்டை நாடுகளான ஜப்பான், தெற்கு சீனா போன்ற நாடுகளிலும் தாக்கம் தெரிந்தது.
இதனையடுத்து, ஜப்பான் அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்தது. விடுத்த சுனாமி எச்சரிக்கையை திரும்ப பெற்ற ஜப்பான் நாட்டில் நிலநடுக்கமே ஏற்பட்டது. ஜப்பானின் கிழக்கு கடற்கரை சாலையான ஹொன்ஷூவின் புகுஷிமா பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக European – Mediterranean Seismologican Centre (ESMC) கூறியது. மேலும், ஜப்பானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.1 ரிக்டர் எனவும் கூறபட்டது.
இந்த தாக்கத்திலிருந்தே வெளிவராத மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது இன்று ஏற்பட்ட நிலநடுக்கம். ஜப்பான் தலைநகரான டோக்கியோவிலிருந்து சுமார் 1,000 கி.மீ. தொலைவில் போனின் தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவினை ஒகாசவரா தீவுகள் எனவும் அழைப்பார்கள்.
மூன்று முக்கிய தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய போனின் தீவுக்கு வடக்கு கடற்கரை பகுதியில் இன்று அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. சுமார் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது என ஜப்பானின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு மத்திய டோக்கியோ வரை உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்க பாதிப்பினால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் மீண்டும் ஏற்பட்டுவரும் நிலநாடுக்கத்தினால் ஜப்பான் மக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.