நேபாளத்திலிருந்து மீண்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பினர்நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய நிலையில், அந்நாட்டு இராணுவத்தால் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக நேற்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரும், தங்களுக்கு நேர்ந்த நெருக்கடி குறித்து அமைச்சர் ஜெய்சங்கரிடம் விவரித்தனர்.
வெள்ளப் பெருக்கு அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த தாங்கள் உடனடியாக அருகில் இருந்த சிறிய மலை ஒன்றின் மீது ஏறியதாலேயே தப்பியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் இருந்தார். பின்னர் இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 யாத்ரீகர்கள் அடங்கிய குழுவை வரவேற்றேன். அவர்களின் அனுபவங்களை நேரில் கேட்டறிந்தபோது நெகிழ்ச்சியடைந்தேன்.
இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட நேபாள ராணுவம் மற்றும் அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தியா திரும்புவதை சுமுகமாக ஒருங்கிணைத்த நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பணிகளைப் பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
