வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெசாக் வலயங்கள் மற்றும் விகாரைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ கூறினார்.
வெசாக் வலயங்களை அண்மித்து விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் வெசாக் அலங்காரங்களை ஒழுக்கத்துடன் பார்வையிட்டு செல்வதன் மூலம் ஏனையோருக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களமும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் தீர்மானித்துள்ளன.
கொழும்பு கோட்டை முதல் பதுளை வரையிலும் பெலியத்தை முதல் அனுராதபுரம் வரையிலும் கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் வரையிலும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்றும்(05), நாளை(07) மறுதினமும் விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் என்.ஜே இதிபொலகே நியூஸ் ஃபெஸ்ட்டுக்குத் தெரிவித்தார்.
இன்று(05) கொழும்பு கோட்டை மற்றும் பெலியத்தையில் இருந்தும், நாளை மறுதினம் பதுளை மற்றும் அனுராதபுரத்தில் இருந்தும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.
நாளை 6 ஆம் திகதி சாதாரண ரயில் சேவைகள் மாத்திரமே இடம்பெறும் என ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் குறிப்பிட்டார்.
இதனிடயே வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
கொழும்பில் இருந்து வௌிமாகாணங்களுக்கும், வௌிமாகாணங்களில் இருந்து கொழும்புக்கும் இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவிக்கிறார்.
வெசாக் போயா விடுமுறை காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
பயணிகளின் தேவைக்கு அமைய பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா மேலும் குறிப்பிட்டார்.