Colombo (News 1st) நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளதாக ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 47000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக நிபுணர் குழுவின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல குறிப்பிட்டுள்ளார்.
பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 75 வீதமானோர் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் இதற்கு முன்னர் சிறுவர்களிடையே அதிகளவில் காணப்பட்ட போதிலும், தற்போது இளைஞர்களே அதிகளவில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பிற்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி, ஒரு வார காலப்பகுதிக்கு நுளம்பு குடம்பிகளை கண்டறிவதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல குறிப்பிட்டுள்ளார்.