Colombo (News 1st) நாட்டில் முட்டை உற்பத்தி மற்றும் கோழிப்பண்ணை துறையில் முதலீடு செய்வதற்கு இரண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்தியாவின் இரண்டு முதலீட்டாளர்கள் இவ்வாறு முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த முதலீடு தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், அவர்களது திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்தக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுமாயின், முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
முட்டை மற்றும் கோழி இறைச்சியை உள்நாட்டில் உற்பத்தி செய்வதையே தாம் விரும்புவதாகவும், அதனை இலங்கையர்கள் முன்னெடுத்தால் அதனை வரவேற்பதாகவும் கூறிய மஹிந்த அமரவீர, வேறு நாடுகளில் இருந்து முட்டை மற்றும் கோழிப்பண்ணை துறையில் முதலீடு செய்வதற்கு விரும்பினால் அது குறித்தும் ஆராயப்படும் என குறிப்பிட்டார்.
பால் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதற்கும் இந்திய முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மேலும், முட்டை, கோழி இறைச்சி மற்றும் பால் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரித்து, அவற்றை ஏற்றுமதி செய்வதே தமது இலக்காக காணப்படுவதாகவும் தற்போதும் குறிப்பிட்ட அளவு அவை ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.