Colombo (News 1st) தம்புத்தேகம – ஏரியாகம பகுதியில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 03 சிறார்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஹட்டகஸ்திஹிலிய பகுதியை சேர்ந்த சிலர் பயணித்த கார், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 08 பேர் காருக்குள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு திரும்பும் வழியில் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த 08 பேரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஆண்கள் இருவரும் பெண்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
காயமடைந்த மற்றுமொருவரும் 03 வயதான சிறுவனும் மேலதிக சிகிச்சைகளுக்காக இன்று காலை அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதான நபர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
வேனின் சாரதி அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியமையினால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.