Colombo (News 1st) நீதிமன்ற உத்தரவிற்கு அமைய காலி சிறைச்சாலைக்கு அனுப்பப்படும் கைதிகளை அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
காலி சிறைச்சாலையில் கைதிகளிடையே Meningococcal எனப்படும் நோய் பரவுவது காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நோய் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.
இதற்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையினூடாக நோயெதிர்ப்பு மருந்தும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நோய்த் தாக்கத்திற்குள்ளான இரண்டு கைதிகள் அண்மையில் உயிரிழந்தனர்.
மேலும் 07 பேர் தற்போது காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.