நேற்று (24) ஒரே நாளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 704 பேர் பலியாகியுள்ளனர்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது. நேற்று 400-க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாகவும், ஏராளமான ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், இஸ்ரேலின் தாக்குதலில் காஸாவில் 2360 குழந்தைகள் உட்பட 5791 பேர் பலியாகியுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காஸாவில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இஸ்ரேல் தாக்குதல்களால் காஸாவில் 15,000-இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே, எரிபொருள் தீர்ந்து விட்டதால் காஸாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன. இதனால் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் காஸாவுக்குள் எரிபொருளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
அதேபோல், காஸாவில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.