Colombo (News 1st) உத்தேச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2023/2024 பெரும்போக நெல் கொள்வனவிற்கான சலுகை வட்டி வீதத்தின் கீழ் அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த 05 வருட கால போகங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான விளைச்சலை அடிப்படையாகக் கொண்டு கடன் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
உத்தேச கடன் திட்டத்தின் கீழ் 9 பில்லியன் ரூபா கடன் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 50 மில்லியன் ரூபாவும், நெற்களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் மொத்த நெல் கொள்வனவாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 25 மில்லியன் ரூபா கடனும் வழங்கப்படவுள்ளது.
கடன் மீளச் செலுத்தும் காலப்பகுதி 180 நாட்களாகும்.
வருடாந்த வட்டி வீதம் 15% என்பதுடன், அதில் 4% திறைசேரியால் பங்களிப்பு செய்யப்படும்.