Colombo (News 1st) கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
பெப்ரவரி 23 ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொடியேற்றமும் திருச்செபமாலையும் திருச்சிலுவை பாதை தியானமும் நற்கருணை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் புனிதரின் திருச்சிலுவை பவனியும் இடம்பெறவுள்ளது.
பெப்ரவரி 24 ஆம் திகதி காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் பீ.ஏ. ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பரிபாலகர் அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் தெரிவித்தார்.
23 ஆம் திகதி யாழ். பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் காலை 5 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் இறுதி பேருந்து காலை 10 மணிக்கு புறப்படும் எனவும் அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் குறிப்பிட்டார்.
குறிகட்டுவானிலிருந்து கச்சதீவுக்கும் நெடுந்தீவிலிருந்து கச்சதீவுக்கும் படகுக் கட்டணமாக ஒரு வழி பயணத்திற்கு ஒருவருக்கு 1500 ரூபா அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை, கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கு சுமார் 8,000 பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய நியூஸ்ஃபெஸ்டிற்கு குறிப்பிட்டார்.
மேலும் தற்காலிக இறங்குதுறை, மருத்துவ முகாம், வீதி புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.