Colombo (News 1st) இந்தியா மற்றும் இலங்கையின் அரச உயர் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இந்திய தலைநகர் புது டெல்லியில் நடைபெற்றுள்ளது.
இந்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளர் வி. ஸ்ரீனிவாஸ் மற்றும் இலங்கை பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க ஆகியோர் தலைமையில் நிர்வாக மற்றும் அரச அதிகாரிகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தை புது டெல்லியில் நேற்று (15) நடைபெற்றது.
இலங்கையை சேர்ந்த பிரதிநிதிகள் குழுவில் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி தர்மஸ்ரீ குமாரதுங்க, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவக பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர்.
இதேவேளை, இந்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் சிலரும் இப்பேச்சுகளில் கலந்துகொண்டனர்.
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பணிப்பாளர், அடுத்த ஐந்தாண்டுகளில் இலங்கை அதிகாரிகளுக்கான திறன் விருத்தி செயற்றிட்டம் – பயிற்சித் திட்டங்களை மேம்படுத்தல், பல்வேறு உயர்மட்டங்களில் 1000 அதிகாரிகளுக்கு கலப்பு முறையில் பயிற்சிகளை நடத்துவதுதல் போன்ற செயற்றிட்டங்களை முன்வைத்தாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.