இணையவழியில் கடவுச்சீட்டு அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் எழுபத்தைந்து வீதமானவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
விண்ணப்பித்தவர்களில் 75 வீதமானவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும் சில ஆவணங்கள் முறைசாரா வகையில் புதுப்பிக்கப்பட்டதாலும் அந்த நபர்களின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒன்லைனில் கடவுச்சீட்டு அனுமதி விண்ணப்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய 51 பிரதேச செயலக அலுவலகங்களில் கைரேகை பதிவுசெய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி, மூன்று நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு அனுமதிக்கான விண்ணப்பங்களைச் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
இதன்படி, பொதுச் சேவைகளின் கீழ் 1,92,041 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் 90,817 பேருக்கு பிரதேச செயலகங்களால் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 55,600 கடவுச்சீட்டு அச்சிடப்பட்டதெனவும் குறிப்பிட்டார்.
மேலும், மூன்று நாள் விரைவு சேவையின் கீழ் 22,471 பேர் ஒன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும், அவர்களில் 18,770 பேரின் கைரேகைகள் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 17,904 பேருக்கு அனுமதிகள் அச்சிடப்பட்டுள்ளதென குடிவரவு – குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.
ஒன்லைனில் விண்ணப்பிக்கும்போது சிலர் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை புகைப்படங்களைப் பயன்படுத்தியிருப்பதாலும் சிலர் செல்போன் எண்களில் விண்ணப்பித்து தொடர்பு கொள்வதாலும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை அச்சிட முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் தலைவர்கள் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தலைமையில் நேற்று (18) பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இதனை வலியுறுத்தினார்.