Colombo (News 1st) முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் T.பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்தப் பகுதியில் அகழ்வுப் பணிக்கான செலவு தொடர்பான அறிக்கையை தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று மன்றில் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், நிதி கையாளுகை தொடர்பில் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் மன்றில் ஆஜராகாதமையினால், அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொக்குத்தொடுவாயில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.