Colombo (News 1st) இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கைப் பெண் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள போதிலும், இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு இலங்கை பிரஜை பணயக்கைதியாக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இந்த விடயங்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
களனி – ஈரியவெட்டிய பகுதியை சேர்ந்த அனுலா ரத்நாயக்க என்பவரே உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் பணிபுரிந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அவரது குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
அவர் இறந்திருந்தால், உடல்களை பரிசோதித்து அடையாளம் காண வசதி செய்து தருமாறு அந்நாட்டு வௌிவிவகார அமைச்சகத்திடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் தெற்கு பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன், அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தூதரகம் எதிர்பார்க்கிறது.
இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் இஸ்ரேலில் 10 வருடங்களாக பணிபுரிந்துள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அங்கு பணியாற்றிய சுஜித பிரியங்கர என்பவர் காயமடைந்துள்ளார்.
காஸா எல்லையில் உள்ள இஸ்ரேல் மக்களை அகற்றி வேறு இடங்களுக்கு அனுப்புவதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இலங்கையர்கள் 17 பேர் அங்கு பணியாற்றுகின்றனர். அவர்களையும் வேறு இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டார்.