Colombo (News 1st) யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 730 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(27) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம – மிரிஸ்ஸ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 10 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
8 இலட்சம் பெறுமதியுடைய போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் 526 பேரும் குற்றத்தடுப்பு பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள 204 சந்தேகநபர்களும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹெரோயின், ஐஸ், கஞ்சா, மாவா போதைவில்லைகள் உள்ளிட்ட பல போதைப்பொருட்களையும் இந்த சுற்றிவளைப்பின் போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் பொலிஸ் விசேட பணியகத்தின் பட்டியலில் இருந்த 24 சந்தேகநபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.