Colombo (News 1st) கரவனெல்ல ஆதார வைத்தியசாலையிலுள்ள CT ஸ்கேன் இயந்திரம் செயலிழந்துள்ளதாக கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளாந்த பரிசோதனைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஸ்கேன் இயந்திரம் மூலம் தினமும் சுமார் 50 நோயாளிகள் பரிசோதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, களுத்துறை வைத்தியசாலையின் CT ஸ்கேன் இயந்திரம் செயலிழந்து ஒரு வருடத்திற்கும் மேலாகின்றது.
கம்பஹா பொது வைத்தியசாலையின் CT ஸ்கேன் இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளதாகவும் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
மயக்க மருந்து நிபுணர்கள் இல்லாமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சப்ரகமுவ தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த வைத்தியசாலையையே பயன்படுத்துகின்றனர்.
அதிகளவான மக்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இங்கு 13 நோயாளர் விடுதிகளே காணப்படுகின்றன.
நாளொன்றுக்கு சராசரியாக 20 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் வருண சம்பத் பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த சில நாட்களாக மயக்க மருந்து நிபுணர்கள் இல்லாமையால், சாதாரண சத்திர சிகிச்சைகள் மாத்திரமே இந்த நாட்களில் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.