Colombo (News 1st) நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்களால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் பயணித்த இரண்டு இங்கிலாந்து பிரஜைகளே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.
கண்டி ரயில் நிலையத்தில் இருந்தே இவர்கள் ரயிலில் ஏறியுள்ளனர்.
ரயிலின் இரண்டாம் வகுப்புக்கான பயணச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு, முதலாம் வகுப்பில் பயணித்தமையால், அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் N.M.J.இதிபொல தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்னவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
இரு வெளிநாட்டவர்களையும் ரயிலில் இருந்து இறங்குமாறு ரயில்வே கட்டுப்பாட்டாளரால் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் இறங்க மறுத்ததால், ரயிலில் இருந்து அவர்களை வௌியேற்றியதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாரிடம் வினவிய போது, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு வௌிநாட்டவர்களையும் கைது செய்ய இயலாது என பொலிஸார் கூறினர்.
இதனிடையே, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரயில்வே பாதுகாப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் H.M.K.பண்டார தெரிவித்தார்.