Colombo (News 1st) மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்ப, அவர்களின் இறப்பையும் அதன் பின்னரான சொர்க்கம், நரகம் ஆகியவற்றையும் நிர்ணயிக்கும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாக சித்திரா பௌர்ணமி போற்றப்படுகிறது.
இந்நாளில் தாயை இழந்தவர்கள் விரதமிருந்து, அவர்களின் ஆத்ம விமோசனத்திற்காக பிதுர் தர்ப்பணம் செய்வது சிறப்புரியதாகும்.
இந்நாளில் கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் சித்திர புத்திரனார் கதை படித்து, கஞ்சி காய்ச்சி எல்லோருக்கும் கஞ்சி வழங்குவது வழமையான நிகழ்வாகும்.
அஸ்வினி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களில் பதின்நான்காவதாக வரும் சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்பு நட்சத்திரமாக அமைகின்றது.
மாதந்தோறும் வரும் சித்திரை நட்சத்திர தினங்களில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்துடன் கூடிவரும் சித்திரை நட்சத்திர தினம் சித்திரா பௌர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது.
இதேவேளை, கிளிநொச்சி இரணைமடு – கனகாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சித்திரா பெளர்ணமி தீர்த்த உற்சவம் இரணைமடு குளத்தில் இன்று நடைபெற்றது.
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
இதனையடுத்து, பெருந்திரளானோர் தமது அமரத்துவம் அடைந்த தாய்க்கு பிதுர் தர்ப்பணம் செய்தனர்.
சித்திரா பௌணர்மியை முன்னிட்டி குளியாப்பிட்டிய ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
சித்திரா பௌணர்மியான இன்று புத்தளம் உடப்பு பத்திரகாளியம்மன் ஆலயத்திலும் விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.
இதேவேளை, சித்திரா பெளர்ணமியான இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் பட்டாடை உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். சர்க்கரை தீபம் ஏந்தி கள்ளழகரை கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.