Colombo (News 1st) நாவலப்பிட்டி ரயில் நிலைய ஊழியர்கள் சிலரால் வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கடமை அதிகாரி மற்றும் ரயில் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் H.M.K.பண்டார தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் பயணித்த இரண்டு இங்கிலாந்து பிரஜைகளே இந்த தாக்குதல் சம்பவத்தை எதிர்கொண்டனர்.
கண்டி ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் ரயிலில் ஏறியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, ரயிலின் மூன்றாம் வகுப்பிற்கான பயணச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு, முதலாம் வகுப்பில் பயணித்தமையால், அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் N.M.J.இதிபொல தெரிவித்தார்.
இரு வெளிநாட்டவர்களையும் ரயிலில் இருந்து இறங்குமாறு ரயில்வே கட்டுப்பாட்டாளர் அறிவித்த போதிலும் அவர்கள் இறங்க மறுத்ததால், ரயிலில் இருந்து அவர்களை வௌியேற்றியதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 ரயில்வே ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.