ஆந்திர மாநிலம் அனந்தபூரில் இந்த கொடூர கொலை நடந்திருக்கிறது. அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொலை சம்பவம்.
அனந்தபூர் மாவட்டத்தின் கார்லாதின் மண்டலத்தில் இந்த கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் தனியாக வசித்துவந்த 84 வயது மூதாட்டியின் மரணம் அப்பகுதியின் இயல்பு நிலையை பெரிதும் பாதித்திருக்கிறது.
இந்த கொலை சம்பவம் குறித்து அனந்தபூர் காவல் அதிகாரி வேங்கட சிவா ரெட்டி கூறுகையில், கொலைசெய்யப்பட்ட ஓபுளாம்மா (84) ஏறகுண்டலா பகுதியில் இருக்கும் அவருடைய வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அவரது குடும்பம் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்கள்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு, ஓபுளாம்மா அவருடைய பக்கத்து வீட்டு கிருஷ்ணமூர்த்திக்கு சுமார் 10 சவரன் தங்க நகையை இரவலாக கொடுத்திருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி வீட்டில் விசேஷம் என்பதாலும், அவரிடம் தங்க நகை இல்லை என்பதாலும் ஓபுளாம்மாவிடமிருந்து தங்க நகையை பெற்றிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
நகை வாங்கி இரண்டு வாரங்களாகியும் திருமப்பிக் கொடுக்காமல் இருந்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. ஓபுளாம்மா நகையை கேட்டாலும் சரியாக பதில் சொல்லாமல் இருந்திருக்கிறார். அதனால், ஓபுளாம்மா ஊர் பெரியவர்களிடம் இந்த சம்பவத்தை எடுத்து கூறியுள்ளார்.
ஊர் பெரியவர்களும் ஓபுளாம்மாவிடம் வாங்கிய நகையை திருப்பி கொடுக்கும்படி கிருஷ்ணமூர்த்திக்கு அறிவுரை கொடுத்திருக்கிறார்கள். இதனால், ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தியும் அவரது குடும்பமும் வெள்ளிக்கிழமை ஓபுளாம்மாவிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாய் சண்டை முற்றிப்போய், கைகலப்பு ஆகியுள்ளது.
அதன்படி, அருகில் இருந்த கோடாரியால் ஓபுளாம்மாவை வெட்டி இருக்கிறது இந்த கும்பல். சம்பவ இடத்திலேயே ஓபுளாம்மா இறந்திருக்கிறார். இறந்த ஓபுளாம்மாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி பெனகச்செர்லா அணையில் வீசியிருக்கிறது கிருஷ்ணமூர்த்தி குடும்பம்.
ஓபுளாம்மாவின் உறவினர் கொடுத்த புகாரை விசாரித்த போலீசார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் குடும்பத்தை கையும் களவுமாக பிடித்தனர். அதன்படி, கூண்டோடு அந்த குடும்பத்தை போலீசார் கைது செய்தனர். மேலும், அணையில் கிடந்த ஓபுளாம்மாவின் உடல்பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.