களனி பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த நான்காம் வருட மாணன் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான பீடத்தில் புவியியல் பிரிவில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் மொணராகலையை சேர்ந்த நிரோஷன் லக்மால் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (24) இரவு 10 மணி அளவில் குறித்த இளைஞன் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நிர்வாகம் தெரிவித்த போதிலும், அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு வாகனம் வருவதற்கு நீண்ட நேரமாகியுள்ளதாகக் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தங்கள் நண்பரை மருத்துவமனையில் அனுமதிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக சக மாணவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் அதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
நிரோஷன் லக்மாலின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் தமது முகநூல் பக்கத்தில் சில உணர்வுபூர்வமான பதிவுகளை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.